இறந்தவருக்கு 3 நாட்கள் சிகிச்சை வழங்கிய இந்திய தனியார் மருத்துவமனை.
இந்தியாவின் நாகை மாவட்டத்தில் வசிக்கும் சேகர் (55 வயது) என்பவர் சில மாதங்களாக குடலிறக்க நோயினால் அவஸ்தைப் பட்டுள்ளார். இந்நிலையில் நாகை மாவட்டத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலே கடந்த 7 ஆம் திகதி அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிகிச்சையின் பின்னர் அவருக்கு இரத்தக் கசிவு இருந்ததால் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் மறுநாள் மீண்டும் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்குவதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அவரது உறவினர்களால் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து கடந்த 28 ஆம் திகதிவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல உறவினர் முடிவெடுத்துள்ளனர்.
அதுபற்றி வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரியப்படுத்தப்பட்ட போது வைத்தி சிகிச்சையில் நிலுவையாக உள்ள 5 லட்சம் ரூபாவை செலுத்திவிட்டு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும் அவர்களிடம் அவ்வளவு தொகை இல்லாத நிலையில் 50 ஆயிரம் ரூபாவை செலுத்திவிட்டு மிகுதியை செலுத்துவதாக பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு சேகர் அரச மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இவ்விடயம் தொடர்பாக பொலீசில் முறைப்பாடு செய்து தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.