ஒருபால் உறவுக்குத் தடையில்லை…! மணஉறவுக்கு வெளியிலான பாலுறவும் குற்றமில்லை…! எங்கே போகிறது பாரத பூமி..?
திருமண பந்தத்தில் இருக்கின்ற ஆண்கள் திருமண உறவுக்கு அப்பால் வேறொரு பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பை வைத்திருந்தால் அவ் ஆணைத் தண்டிப்பதற்கு 497 எனும் இந்திய சட்டப்பிரிவு வழிசெய்கின்றது. இச் சட்டம் தவறானது , பாலின பாகுபாட்டைக் காட்டுகின்றது என்று குறிப்பிட்டு,
இத்தாலியில் வசிக்கின்ற ஜோசப் சைன் எனும் இந்திய ஆடவர் இச் சட்டத்திற்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார். ஏனெனில் இச் சட்டத்தின் மூலம் ஒரு பெண் தவறு செய்திருந்தாலும் அங்கே தண்டனை பெறப்போவது ஆண் மட்டுமே என்பது அவரது வாதமாகும்.
இச் சட்டப் பிரிவின்படி திருமணமான ஒரு பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கும் பட்சத்திலேயே சட்டம் ஆணுக்கு எதிராகச் செயற்படும். மாறாக வயதுக்கு வந்த திருமணமாகாத பெண்ணுடனோ, அல்லது கைம்பெண்ணுடனோ பாலியல் தொடர்பு வைத்திருக்கும் ஆண் இச் சட்டத்தின் மூலம் தண்டனை பெறுவதில்லை. இதன் மூலம் ஒரு விடயம் தெளிவாகின்றது. அது என்னவெனில் திருமணமான பெண் ஒரு ஆணின் சொத்தாகப் பார்க்கப்படுகின்றாள், மாறாக திருமணமாகாத பெண்ணோ அல்லது கைம்பெண்ணே யாருடைய சொத்தாகவும் பார்க்கப்படுவதில்லை.
இந் நிலையில் இன்றைய இந்திய சமூகத்தில் திருமண உறவுக்கு வெளியிலான தொடர்புகளின் விளைவுகளாக கொலை, தற்கொலை, வன்முறை, குழந்தைக் கொலை, குழந்தைகள் அனாதரவாதல் போன்ற பல தீய சமூக விளைவுகள் ஏற்படுவதை அன்றாட ஊடகங்களின் செய்திகள் எடுத்தியம்புகின்றன. எனவே சமூக மாற்றம் ஒன்றிற்கான தேவை என்பதை விட இன, சாதித்துவ , ஆதிக்க மனநிலைகளில் ஏற்படவேண்டிய மாற்றமே இப்போதைய தேவை என சமூகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.