உத்தரப் பிரதேச முதல்வர் மீது 19 வருடங்களின் பின் பாயும் கொலை வழக்கு….! நீதி ஏன்தான் நீண்டநாள் உறங்குகின்றதோ?
இந்திய உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் ஆதித்தியநாத் மீது கொலைக் குற்றச் சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றிற்கு ஒரு வாராத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது அந் நாட்டின் அமர்வு நீதிமன்றம்.
1999 ஆம் ஆண்டு சமஜ்வாதக் கட்சி நடாத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தியநாத் தலைமையிலான குழு ஒன்று தாக்குதல் நடாத்தியிருந்தது. அச் சம்பவத்தில் சமாஜ்வாத கட்சியின் தலாத் அஸீசின் மெய்ப்பாதுகாவலராக இருந்த சத்தியப் பிரகாஸ் யாதவ் என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.
முன்னதாக அமர்வு நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்ட அவ் வழக்கு உச்ச நீதிமன்றுக்குச் சென்று உச்ச நீதிமன்றின் கட்டளையின் பிரகாரமே மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இவ் வழக்கு விசாரணைகள் பக்கச் சார்பின்றி நடைபெற வேண்டுமாயின் முதல்வர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று பல கட்சிகளும் கோரியுள்ளன.
ஆதித்தியநாத் பதவியில் அமர்த்தப்பட்ட போதே அவருக்கு எதிராகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் அப்போது பா.ஜ.கா உத்தரப் பிரதேசத்திற்கு அவரைப் போல ஒருவர் கிடைக்க மாட்டார் என்று தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.