முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் தாக்கப்பட்டதில் ஒருவர் பலி..!! இந்தியாவில் நடந்த சோகம்.!
மயிலாடுதுறை மணக்குடி செட்டித்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் 23 வயதுடைய முத்தழகன் என்ற மகன் உள்ளார். இவரின் சகோதரர் கட்டபொம்மனுக்கும் சேந்தங்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மயிலாடுதுறை பாலாஜி நகரில் கட்டபொம்மனுக்கும் சுரேசுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் கட்டபொம்மனின் இருசக்கர வாகனத்தை சுரேஷ், சசிகுமார், முத்துப்பாண்டி, மணிகண்டன் ஆகியோர் பிடுங்கி வைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அண்ணன் முத்தழகன் மயிலாடுதுறை தருமபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த குமாரின் மகன் 19 வயதுடைய சிவராஜ் என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு கட்டபொம்மன் இருசக்கர வாகனத்தை திருப்பி கேட்பதற்காக நேற்றிரவு மயிலாடுதுறை பாலாஜி நகருக்கு சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, முத்தழகனையும், சிவராஜையும் கத்தி, இரும்பு பைப் மற்றும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட கட்டபொம்மன் தப்பியோடினார்.
படுகாயம் அடைந்த முத்தழகன், சிவராஜ் ஆகிய இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிவராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முத்தழகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, பொலிஸார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கீழ நாஞ்சில் நாட்டை சேர்ந்த சசிகுமார் என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிவராஜ் ஆந்திராவில் சிற்பத்தொழில் பார்த்து வந்தவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து நடந்தே மயிலாடுதுறைக்கு வந்தடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.