சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதி கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்படும் இடமாக அறிவிப்பு..!
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ள தொழிற்சாலை ஒன்று கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் பரவலை முறியடிக்க, தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் அத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 31 சுங்கை காடுட் அவென்யூவில் அமைந்திருக்கும் தொழிற்சாலை தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது. அங்கு வசித்து வந்த 174 ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இதுவரையில்லாத அளவில் 1,426 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இங்கு 8,000-ஐ தாண்டியுள்ளது. அவர்களில் சுமார் 6,075 பேர் தங்கும் விடுதிகளில் உள்ளவர்கள். நேற்றைய நிலவரப்படி பொங்கோலிலுள்ள S11 தங்கும் விடுதியில் ஆக அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. அங்கு மொத்தம் 1, 977 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து Sungei Tengah தங்கும் விடுதியில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . சிங்கப்பூரில் இதுவரை 19 தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்படும் இடங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.