சிங்கப்பூருக்குள் 41,000 வெள்ளி பெறுமான போதைப்பொருளைக் கடத்த முயன்ற நபர் கைது…!!
சிங்கப்பூருக்குள் துவாஸ் குடிநுழைவு, சோதனைச்சாவடியின் வழியாகச் சென்று 41,000 வெள்ளி பெறுமான போதைப்பொருளைக் கடத்த முயன்ற 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஓட்டிவந்த காரின் பின்னிருக்கைக்கு உள்ளே இருந்த நிலையில் சுமார் 3 கிலோகிராம் கஞ்சாவும் 125 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சுமார் 410 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்தில் பயன்படுத்தக்கூடியதற்கு நிகரானது அந்த அளவு. கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விசாரணையில் உதவி வருகிறார். கஞ்சா போன்ற போதைப்பொருள்களை உட்கொள்வது, வைத்திருப்பது அல்லது விநியோகம் செய்வது இவை அனைத்துமே சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சட்டவிரோதமாகப் போதைப்பொருள், ஆயுதங்கள், நபர்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கடத்த முயல்வோரைத் தடுப்பதற்குத் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டது.