கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!!!
சீனாவை ஆட்டிப் படைக்கும் கொடிய உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்த நிலையில், குறித்த வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வரும் நிலையில் உலகலாவிய ரீதியில் பங்குச் சந்தைகள் குறிப்பிடத்தக்களவு சரிவடைந்துள்ளன. அமெரிக்க டோவ் – ஜோன்ஸ் தொழிற்துறை பங்குச் சந்தை குறியீட்டு எண் நேற்று 1,200 புள்ளிகள் சரிந்து வரலாற்றில் பாரியளவான சரிவை சந்தித்துள்ளது.
அதோடு எப்பல், போயிங் மற்றும் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட அனைத்து பாரிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துள்ளன. இருப்பினும் இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் முகத்திரைகளை உற்பத்தி செய்யும் முக்கிய நிறுவனம் ஒன்றின் பங்குகள் உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறப்படுகின்றன. அதே நேரத்தில், அமெரிக்க பங்குச் சந்தையுடன் பிரித்தானியாவின் லண்டன், ஜேர்மனியின் பிராங்போட் மற்றும் பிரான்சின் பாரிஸ் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் நேற்று சரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் தென்கொரியாவில் நேற்று மாத்திரம் 256 பேர்கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதற்கு அமைய அந்த நாட்டில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அங்கு இந்த தொற்றால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் சீனாவிற்கு வெளியே தென்கொரியாவிலேயே அதிகளவானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கு அமைய அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தென்கொரியாவிற்கான சுற்றுலா எச்சரிக்கையை விடுத்துள்ளன. அதே நேரத்தில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கும் இடையில் இன்றைய தினம் ஆரம்பமாகவிருந்த ஒன்றிணைந்த போர் பயிற்சி பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளதுடன் 83 ஆயிரத்து 389 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.