குரோஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!
குரோஷிய தலைநகரான ஜாக்ரெப்பின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் சேதப்பட்டதுடன், வாகனங்கள் இடிபாடுகளில்சிக்கின. இதனால் தீ விபத்துக்களும் ஏற்பட்டது. நேற்றைய தினம் ஜாக்ரெப் முழுவதும் பல இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்த நிலையில், 15 வயதுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மற்றவர்கள் காயமடைந்ததாகவும் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.
மேற்கு பால்கன் முழுவதும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது சுமார் 5.3 ரிக்டர் அளவாக பதிவாகியது. சுமார் 10 வினாடிகளுக்கு மேல் பூகம்பம் நீடித்தது. பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக், கடந்த 140 ஆண்டுகளில் ஜாக்ரெப்பில் ஏற்பட்ட பூகம்பமே மிகப் பெரியது என கூறினார்.
நகரின் சின்னமான கதீட்ரல் உட்பட பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. நகரம் முழுவதும் கட்டட இடிபாடுகளாக காணப்பட்டன. வாகனங்கள் இடிபாடுகளிற்குள் சிக்கியிருந்தன. நகர வீதிகள் குப்பைகளால் சிதறடிக்கப்பட்டன. கான்கிரீட் பலகைகள் கார்கள் மீது விழுந்தன, புகைபோக்கிகள் நுழைவாயில்களுக்கு முன்னால் தரையிறங்கின. குறித்த பகுதியில் இருந்து மகப்பேற்று வைத்தியசாலையிலிருந்த தாய்மார், பிரசவித்த குழந்தைகளுடன் அருகிலிருந்த பூங்காவில் தஞ்சமடைந்தனர். பின்னர், இராணுவத்தினர் அவர்களை பாதுகாப்பான இடங்களிற்கு மாற்றினர்.