கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்..!!
உலக நாடுகளை நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும், அவை பயனுள்ளவையா என்பதை அறிய சில காலம் எடுக்கும் என என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தொழில்நுட்ப தலைவரான மரியா வன் கெர்கோவ் இதனை தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “கொரோனா மருந்து குறித்து நூற்றுக்கணக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
குறித்த மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன, இறப்பை எவ்வாறு தடுக்கிறது, எவ்வளவு பாதுகாப்பானவை, ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமாபோன்ற ஆய்வுகளின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது “ஒற்றுமை சோதனை” ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இது சில மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை மையமாக கொண்ட மருத்துவ பரிசோதனையாகும். அவை கொரோனா வைரசுக்கு பாதுப்பானவையா மற்றும் பயனுள்ளவையா என்பதை நோக்குகின்றன. அதற்காக 2,500க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எந்த சிகிச்சைகள் சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கான முழு பதில்களைப் பெறுவதற்கு சில காலம் எடுக்கும். ஆனால் இப்போது கொரோனா வைரசுக்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் எம்மிடம் தற்போது இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.