இந்தோனேசியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி பலர் சாவு!
இந்தோனேசியாவில் பெய்து வரும் தொடர் மழையால் 23 பேர் வரை பலியாகியுள்ளனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பருவமழை பெய்துவருகிறது. இதனால், அங்கு பெரும் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. அத்துடன் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜகார்த்தாப் பிராந்தியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கி 23 பேர் வரை பலியாகியுள்ளனர் என இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமாத்திரமின்றி குறித்த இயற்கை அனர்த்தங்களில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலை அங்கு தொடர்வதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, குறித்த பிராந்தியத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளமையால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.