சிங்கப்பூரில் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய 3 பேர் கைது..!!
சிங்கப்பூரில் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய 3 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள்; ஒருவர் அமெரிக்கர் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தைச் சேர்ந்த 48 வயதுடைய சிங்கப்பூரர் சோங் சுன் வா கடந்த மாதம் 17ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து வந்துள்ளார்.கடந்த மாத இறுதி வரை அவருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 23ஆம் திகதி அவர் பேருந்தில் பயணம் செய்து ஜூரோங் சென்றார்.
28,29ஆம் திகதிகளில் வீட்டிற்கு அருகே நடமாடினார். உட்லண்ட்ஸைச் சேர்ந்த 25 வயதுடைய சிங்கப்பூரர் சிட்டி வான் சு’ஐடா என்ற பெண் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிறகு ஒருமுறை மளிகைப் பொருள் வாங்க வெளியே சென்றிருந்தார். அமலாக்க அதிகாரிகளின் தொலைபேசி அழைப்பிற்குப் பலமுறை பதிலளிக்கவில்லை. விமானியான 44 வயதுடைய அமெரிக்கர் பிரையன் டுகன் யர்கன் சாங்கி ஹோட்டலில் தங்கியிருந்தார்.
சாங்கியிலிருந்து அவர் ரயில் மூலம் சிட்டி ஹால் சென்று பின்னர் நடந்தே சைனாடவுன் சென்று பொருள்கள் வாங்கியது தெரியவந்தது. மூவரும் தெரிந்தே கட்டாய உத்தரவை மீறியதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கூறியது. தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடன் நடத்தப்பட்ட கலந்தாலோசனையைத் தொடர்ந்து, தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளன.