காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணுக்கு ஓடும் காரில் வைத்து தாலிக்கட்டிய இளைஞன்..!!! சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!
காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணுக்கு ஓடும் காரில் வைத்து தாலிக்கட்டிய இளைஞனின் சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேரை கைது செய்துள்ள பொலிஸார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் ஹசான் மாவட்டத்திலுள்ள அர்சிகேரே என்ற கிராமத்தை சேர்ந்த மணு என்பவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் தனது காதலை பலமுறை அப்பெண்ணிடம் கூறியதோடு, அவரது வீட்டிலும் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் குறித்த இளம் பெண் மணுவின் காதலை ஏற்க மறுத்த நிலையில் பெண்ணின் வீட்டாரும் மணுவுக்கு தங்களது மகளை கட்டிக் கொடுப்பதில் சம்மதமில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இளம்பெண் வழக்கம் போல ஹசான் பகுதியிலுள்ள டெய்லர் கடைக்கு வேலைக்கு சென்றார், பின்னர் வேலைக்கு சென்ற இளம் பெண் இன்னும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் குறித்த பெண் கிடைக்கவில்லை என்பதால் துத்தா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தியதில், மணு என்ற இளைஞர் தனது நண்பர்களின் உதவியுடன் இளம் பெண்ணை கடத்தி சென்று காரில் வைத்தே தாலி காட்டியுள்ளார்.
அதைத் தொடர்ந்து இராமாநகாராவிலுள்ள உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளனர். உடனே ராமாநகாரா பகுதிக்கு விரைந்து சென்று பெண்ணை மீட்ட பொலிஸார், மணு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், டெய்லர் கடைக்கு பணிக்கு சென்ற பெண்ணை நோட்டமிட்டு, பேருந்து நிலையத்தில் காருடன் காத்திருந்ததாகவும், அப்போது பேருந்தில் ஏறுவதற்காக நின்ற பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, காரில் வைத்தே தாலி கட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் களவானி படத்தில் வருவதை போன்றே, பெண்ணின் சத்தம் வெளியே கேட்காதவாறு, ரேடியோவை பாடவைத்தும் சென்றனர். இதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்ததே கடைசியில் அவர்கள் சிக்குவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளனர்.