ஒடிசா- மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் 15 பேர் பலி..!!
இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் 6 மணி நேரத்திற்கும் மேலாக புரட்டி எடுத்த அம்பன் புயலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளும், எண்ணற்ற மரங்கள் மற்றும் மின் கம்பங்களும் பலத்த காற்றால் சேதமடைந்தன.
வங்க கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப் பெற்று, அதன் பின்னர் அதி தீவிர புயலாக மாறி மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்தது. பிற்பகல் 2.30 மணியளவில் மேற்குவங்கத்தின் திகா (digha)மற்றும் வங்கதேசத்தின் ஹடியா ( hatia) தீவுக்கு இடையில் சுந்தரவனத்தை ஒட்டிய பகுதியில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது கடலில் பல அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர், பத்ரக், கன்ஜம், புரி போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது. ‘மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சாலையோரம் இருந்த மரங்கள், மின்கம்பங்கள் மண்ணில் சாய்ந்து விழுந்தது. ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. அதி வேகமான சூறைக்காற்றால் மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்ததால் கொல்கத்தாவில் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன. தயாராக இருந்த தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் உடனடியாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.இரவு 7 மணிக்குள் அம்பன் புயல் முழுவதுமாக கரையைக் கடந்து விட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு – வடகிழக்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தல் அம்பன் புயல் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பன் புயலால் பலத்த சேதம் ஏற்படும் என்று கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா, மேற்குவங்கத்தில் கடலோர பகுதிகளை சேர்ந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மரம் முறிந்து விழுந்ததாலும், கூரை சரிந்ததாலும் மேற்குவங்கத்தில் 2பேர் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த 41 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன. முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, நிலைமையை கண்காணித்தார்