உடல்நிலை சீராக இருக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவர்!
சிங்கப்பூரில் உடல் நிலை சீராக இருக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோரைக் கையாள பொதுச் சுகாதாரத்துறைக்கு போதுமான வளங்கள் இருக்கும் என்று அமைச்சு கூறியது. உலக அளவில்கொரோனா தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
அவசரகால நடவடிக்கையின் ஓர் அங்கமாக மருத்துவ, மருந்தகச் சேவைகளை விரிவாக்கம் செய்யும் திட்டங்களைச் சுகாதார அமைச்சு வகுத்துள்ளது. அதிகரிக்கும் தேவையைக் கையாள அது வழிவகுக்கும். கடந்த 3 நாள்களில், 20 நோயாளிகள் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திலிருந்து கான்கார்ட் (Concord) அனைத்துலக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 29 நோயாளிகள் மவுண்ட் எலிசபெத் (Mount Elizabeth) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். நோயாளிகள் பிரத்யேக அவசர மருத்துவ வாகனம் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.