சிங்கப்பூரில் பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் போன்றன ஜூன் 01 ஆம் திகதி வரை நிறுத்தம்..!!
சிங்கப்பூரில் பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், சிறப்புத் தேவையுடைய மாணவர்க்கான நிலையங்கள் போன்றவற்றின் வழக்கமான சேவைகள் ஜூன் 01 ஆம் திகதி வரை நிறுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த நிலையங்களின் ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்க எக்டா(ECDA) எனப்படும் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்புடன் சேர்ந்து பணியாற்றவிருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் வரையறுக்கப்பட்ட சேவைகளை மட்டும் தொடர்ந்து வழங்கும். அத்தியாவசியச் சேவையில் பணியாற்றும் பெற்றோரும், மாற்று ஏற்பாடு செய்யமுடியாதோரும் அதனைப் பயன்படுத்திக்கொள்வர். Early Intervention centre எனப்படும் சிறப்புத் தேவையுடைய 6 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு உதவும் நிலையங்கள், தொலைத் தொடர்பு மூலம் சேவைகளைத் தொடரும். தேவை அதிகமுடைய மாணவர்களுக்கு மட்டும் அது பொருந்தும். இவ்வேளையில், அனைத்து பாலர் பள்ளிகளுக்கும் ஜூன் மாதப் பள்ளி விடுமுறை ஒரு மாதம் முன்பாக மே 5ஆம் தேதியே தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி பாலர் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும். அன்றிலிருந்து செப்டம்பர் 6 வரை, இந்தக் கல்வியாண்டின் மூன்றாம் பருவம் அந்தப் பள்ளிகளில் நடப்பிலிருக்கும். இடையில் ஜூலை 20 இலிருந்து 26 ஆம் திகதி வரை ஒரு வார விடுமுறை வழங்கப்படும்.