சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் புதிதாக இருவர் பலி..!!
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 81 வயதும், 82 வயதும் நிரம்பியவர்கள். தேசியத் தொற்றுநோய் நிலையம், சிங்கப்பூரர்களான அந்த இருவரின் குடும்பங்களையும் தொடர்புகொண்டு உதவிவருவதாகச் சுகாதார அமைச்சு கூறியது. நேற்றைய தினம் உயிரிழந்த இருவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் புதிதாக 799 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது; அவர்களில் 764 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 17 பேர். சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் 14 பேர். வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் நால்வர். அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை 1,095 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 1,451 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 20 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 11,800க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன. சுகாதார அமைச்சு அந்தத் தகவல்களை வெளியிட்டது.