சிங்கப்பூரில் தம்பதியைத் தகாத வார்த்தைகளால் திட்டிய டாக்சி ஓட்டுநர்..!!
சிங்கப்பூரின் Trans-Cab நிறுவனத்தைச் சேர்ந்த 42 வயதுடைய டாக்சி ஓட்டுநர் மீது, கார் ஓட்டும் போது கோபம் அடைந்து கண்மூடித்தனமாக நடந்து கொண்டதாய்க் குற்றம் சுமத்தியுள்ளனர். வேண்டும் என்றே மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்த எண்ணம் கொண்டதாகவும் இன்னொரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டாக்சி ஓட்டுநர், மற்றொரு ஓட்டுநரின் காரைக் குத்துவதையும் உதைப்பதையும் காட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அந்தக் காணொளியில், குழந்தையுடன் இருக்கும் தம்பதியை அவர் தகாத வார்த்தைகள் பயன்படுத்தித் திட்டும் காட்சிகளும் இருந்தன. Plier எனும் கருவியைக் கொண்டு அவர்களை அச்சுறுத்தியதாகவும் நம்பப்படுகிறது. மேலும் இந்த சம்பவங்கள் கடந்த மாதம் 22 ஆம், 24 ஆம் திகதிகளில் நடந்துள்ளது. இரண்டு சம்பவங்களிலும் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் டாக்சி ஓட்டுநர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், இரண்டு வருடங்கள் சிறையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.