சிங்கப்பூரில் பொருள், சேவை வரியை அதிகரிப்பதற்கான காரணத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்..!!
சிங்கப்பூரில் பொருள் மற்றும் சேவை வரியை அதிகரிப்பதற்கான காரணத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். சிங்கப்பூரின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொருள் மற்றும் சேவை வரியைப் பயன்படுத்துவது பொறுப்பான முறையில் விளங்குவதாக
அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு பொருள் மற்றும் சேவை வரி அதிகரிக்கப்படாது என்ற போதிலும் எதிர்காலத்தில் அதனை அதிகரிக்கும் திட்டம் உள்ளது.
“வரி விதிப்பது யாருக்கும் பிடிக்காது. நிதி அமைச்சர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. குறைந்த அளவில் வரியை விதிப்பது தான் அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வருகிறது. அதன்மூலம் குடும்பங்கள் தாங்கள் ஈட்டும் சம்பளத்தில் பெரும் பகுதியை வைத்துக்கொள்ள முடியும். அவற்றைக் கொண்டு அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நன்கு செலவழிக்கலாம்” என திரு. ஹெங். தெரிவித்தார்.
பொருள் மற்றும் சேவை வரிகளின் மூலம் முக்கிய தேசியத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, கட்டுபடியான விலையில் பாலர்ப் பள்ளிச் சேவைகளை வழங்குவது ஆகியவை அவற்றுள் அடங்கும்.