இலங்கை மகளிர் அணி வீராங்கனை சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு..!!
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட வீராங்கனையுமான சஷிகலா சிறிவர்தன தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை பெண்கள் அணி நாடு திரும்பியுள்ளது. அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஷிகலா சிறிவர்தன தனது ஓய்வு பற்றிய அறிவிப்பையும் தெரிவித்தார். இலங்கை பெண்கள் அணிக்காக அதிகளவு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரேயொரு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டுள்ள சகலதுறை வீராங்கனையான இவர், 98 போட்டிகளில் இலங்கை ஒருநாள் மற்றும் டி20 பெண்கள் அணியின் தலைவியாக செயற்பட்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், 2005 இல் நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து 2009, 2013, 2017 உள்ளிட்ட நான்கு உலகக் கிண்ணத் தொடர்களிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், 2012, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடினார். 34 வயதுடைய சஷிகலா சிறிவர்தன, இதுவரை 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 2029 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், 77 டி20 போட்டிகளில் விளையாடி 1079 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.