என்னையும் இலங்கை வீரர் திசரா பெரேராவையும் காலு என்று ஏளனமாக அழைத்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் – டேரன் சமி
என்னை காலு என்று ஏளனமாக அழைத்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவரான டேரன் சமி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டேரன் சமி விளையாடியவர்.
இந்த போட்டிகளில் விளையாடிய போது தன்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் சிலர் காலு என அழைத்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் டேரன் சமி இன்ஸ்டாவில் பதிவிட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் பழைய போஸ்ட் ஒன்றை எடுத்து போட்டு நெட்டிசன்கள் சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளனர். அதில், டேரன் சமிக்கு பதிலாக இஷாந்த் சர்மா காலு என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இஷாந்த் சர்மா வெளியிட்ட அந்தப் பதிவில், “நான், புவி, காலு, மற்றும் சன் ரைசர்ஸ்” என்று குறிப்பிட்டு பகிர்ந்த புகைப்படத்தில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், இடையே நிற்கும் டேரன் சமியை ‘காலு’ என்று தெரிவித்துள்ளார்.