திட்டமிட்ட படி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்கும் என உறுதியளித்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே..!!
திட்டமிட்ட படி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்தார். சீனாவில் கோர தாண்டவமாடிய கொடிய கொரோனா வைரஸ் தற்போது உலக சுகாதார அமைப்பால் உலகளாவிய தொற்று நோயாக அடையாளம் காணப்பட்டது. கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி 5,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் உலகெங்கிலும் உள்ள பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு சில விளையாட்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிலையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்ட படி இடம்பெறும் என ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்தார்.
ஒலிம்பிக் திட்டமிட்ட படி இடம்பெறும். ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு நாங்கள் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் உலக சுகாதார அமைப்பு உடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ஐ.ஓ.சி உட்பட மற்ற பங்குதாரர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டோம், நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், என்று அபே தெரிவித்தார்.
ஏற்கனவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜூலை 24 துவங்கவிருக்கும் ஒலிம்பிக் 2020 ஐ ஒத்திவைக்க பரிந்துரைத்திருந்தார். ஜப்பானில் பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக்கை நடத்துவதை விட எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாங்கள் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று டிரம்பிடம் கூறியுள்ளோம், ஜப்பான் செயல்படும் வெளிப்படைத்தன்மை தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக டிரம்ப் பதிலளித்தார் என ஜப்பான் ஷின்சோ அபே கூறினார்.