டோனியால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைவது மிகக் கடினம் – வீரேந்தர் சேவாக்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் முன்னாள் தலைவருமான மகேந்திரசிங் தோனி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைவது மிகக் கடினம் என்று இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் தொடக்கத்தில், பிசிசிஐ 2020-21 பருவத்திற்கான வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலை அறிவித்தது.
பட்டியலில் எதிர்பார்த்த பெரும்பாலான பெயர்கள் இருந்த போதிலும், கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத டோனியின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. அன்றில் இருந்து, டோனியின் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. யூகங்களுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக், டோனி இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம் என்று கருதுவதாக கூறினார். தேர்வாளர்கள் ஏற்கனவே முன்னோக்கி நகர்ந்து டோனிக்கு மாற்றை கண்டறிந்துள்ளனர் என்று சேவாக் தெரிவித்துள்ளார். டோனி அணியின் எந்த வரிசையில் பொருந்துவார்? ரிஷாப் பந்த் மற்றும் கே.எல். ராகுல் போன்றவர்கள் ஏற்கனவே சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியுடன் டோனியின் எதிர்காலம் தொடர்பான எந்த தெளிவும் இல்லை என்றாலும், ஐபிஎல் 2020ல் அவர் மீண்டும் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தலால் எதிர்வரும் 29 ஆம் திகதி தொடங்கிய வேண்டிய 13வது ஐபிஎல் ஏப்ரல் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைப்பால் கிரிக்கெட்டில் டோனி தனது ஓய்வை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.