ஆங்கிலம் தெரியாமல் அனைவர் முன்னிலையிலும் அவமானப்பட்டேன் – ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆங்கிலம் தெரியாமல் அனைவர் முன்னிலையிலும் அவமானப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஹர்பஜன் சிங் வலம் வந்தவர்.
ஹர்பஜன் சிங் இதுவரை 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்களை எடுத்துள்ளார். அதை தொடர்ந்து 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்களை சாய்த்துள்ளார். அண்மையில் இவர் ஐபி எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், நான் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு பெங்களூருவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினேன்.
இந்தப் போட்டிக்கு முன்பு நடந்த அணியின் கூட்டத்தில் வீரர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். அப்போது எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஆகவே அவர்கள் பேசியது எதுவுமே எனக்கு புரியவில்லை. அந்தக் கூட்டத்தில் என்னை பேசுமாறு மற்ற வீரர்கள் கூறினார்கள். ஆனால் நான் பேசவில்லை.
அதையடுத்து அப்போதைய அணித்தலைவர் அசாருதின் என்னிடம் வந்து என்ன பிரச்னை என்று கேட்டார்.
எனக்கு ஆங்கிலம் தெரியாது அதனால் தான் பேசவில்லை என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் எனக்கு தெரிந்த பஞ்சாபியில் பேசு என்று அறிவுரை வழங்கினார் என கூறினார்.