“ நான் மூன்று முறை தற்கொலை செய்ய எண்ணினேன்” – முகமது ஷமி ரோகித் சர்மா
கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலே முடங்கி கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை பற்றி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரோகித் சர்மாவுடன் உரையாடிய போது “ நான் மூன்று முறை தற்கொலை செய்ய எண்ணினேன்” என கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
“கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நான் காயமடைந்த போது நான் முழுமையாக குணமடைவதற்கு 18 மாதங்கள் ஆகியது . இது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலமாக அமைந்தது. நான் மீண்டும் விளையாட ஆரம்பித்த போது சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தால் அப்போது மூன்று முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணினேன். கடந்த மார்ச் மாதம் 2018 ஆம் ஆண்டு குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதனால் என் வாழ்க்கையே தலைகீழாக மாறியுள்ளது.
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால் விசாரணை முடியும் வரை பிசிசிஐ, ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினேன். அந்த நேரத்தில் 24 மணி நேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். என்னுடன் அவர்கள் இல்லாமல் போயிருந்தால் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன். என்னுடன் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன்” என உருக்கமாக ஷமி தெரிவித்துள்ளார் .