பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய துருக்கி கால்பந்து வீரரின் வாக்கு மூலம்!
உயிரைக் குடிக்கும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக அனைவரும் நம்பியிருந்த நிலையில், தமது 5 வயதுடைய மகனை மூச்சுத்திணறடித்து தாமே கொலை செய்ததாக துருக்கி கால்பந்து நட்சத்திரம் பகீர் கிளப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவே துருக்கி கால்பந்து நட்சத்திரம் 32 வயதுடைய Cevher Toktas என்பவரின் 5 வயதுடைய மகன் காசிம் ஒரு வாரம் முன்னர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கால்பந்து நட்சத்திரம் டோக்டாஸும் மகன் காசிமுடன் மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார். காசிம் உயிரிழந்து 11 நாட்களுக்கு பின்னரே கொரோனாவால் மகன் இறக்கவில்லை எனவும் தாம் கொலை செய்ததாகவும் டோக்டாஸ் வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து துருக்கி பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். துருக்கியில் பிரபலமான கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவர் கைதாகியுள்ள டோக்டாஸ்.
கடந்த மாதம் இருமல் மற்றும் காச்சலுடன் தமது மகன் காசிமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் டோக்டாஸ். கொரோனா பாதிப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரையும் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு மருத்துவமனை நிர்வாகம் உட்படுத்தியது. ஆனால் அன்று மாலை, மகன் காசிமுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக கூறி டோக்டாஸ் மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளார்.தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு காசிமை மருத்துவர்கள் அனுமதித்திருந்தாலும், சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் காசிம் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. கொரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகள் காசிமில் தென்பட்டதால், மரணமும் கொரோனாவால் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அதனையடுத்து கொரோனா நோயாளிகள் போன்று சிறுவன் காசிமின் உடலுக்கும் உரிய இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. காசிம் இறந்த சில நாட்களில், கல்லறைத் தோட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, டோக்டாஸ் இந்த உலகத்தை நம்பி வாழாதே என பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது காவல் நிலையம் சென்று தமது மகனை மூச்சுத்திணறடித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார் டோக்டாஸ்.தமது மகனை நேசிக்க தம்மால் முடியாமல் போனது எனவும், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள டோக்டாஸ், அவனை விருப்பமில்லை என்பதாலையே கொலை செய்ததாகவும், உளவியல் பிரச்சனைகள் ஏதும் தமக்கில்லை எனவும் டோக்டாஸ் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.