இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்படவுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன் முதலில் உலகக் கிண்ணத்தை பெற்றுத் தந்த முன்னாள் தலைவர் மற்றும் ஆல்-ரவுண்டர் வீரர் கபில்தேவ் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ செய்த நிலையில் அவர் வெற்றி மாலை சூடினார்.
கபில்தேவ் சிறந்த வெற்றிகரமான அணித்தலைவராக விளங்கினார். 1994 ஆம் ஆண்டு அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும், 5000 ஓட்டங்களுடன் 400க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அசாத்திய சாதனையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக கபில்தேவ் நியமிக்கப்படவுள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று அவர் கூறினார்.