இலங்கை அணிக்கு எதிரான 20 க்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி..!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரை, 2 க்கு 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி இழந்துள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, நேற்றைய இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்தது.
பல்லேகலையில் நேற்றைய தினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது இருபதுக்கு 20 போட்டி நடைபெற்றது.அந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதற்கு அமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 17 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது. அதற்கு அமைய, 2 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 கிரிக்கட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி, 2 க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை, 3 க்கு 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.