கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட 25 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கிய இலங்கை கிரிக்கெட்..!!
சீனாவின் ஹவுன் நகரில் பரவ தொடங்கிய கொடிய நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸை எதிராக போராடும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு 25 மில்லியன் (இலங்கை ரூபாய்) நிதியுதவி வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கையில் 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தவிர்க்க அந்நாட்டு அரசாங்கம் ஊரடங்கு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் இலங்கையில் தேசிய சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், வைரஸ்க்கு எதிராக போராடி வரும் அரசாங்கத்திற்கு உதவும் விதமாக உடனடியாக 25 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி கொடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் உதவிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றி கூறியுள்ளார். அனைத்து தரப்பிலிருந்தும் வரும் ஆதரவு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஆதரவை வழங்க முன் வந்த அனைத்து தனிப்பட்ட வீரர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.