கடந்த 2 மாதங்களில் பேஸ்புக்கில் 30 பில்லியன் டொலர்கள் அதிகம் பெற்று உலகின் 3வது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்ற மார்க் ஜூகர்பெர்க்..!!
பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 30 பில்லியன் டொலர்கள் அதிகம் பெற்று உலகின் 3வது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோர தாண்டவமாடும் கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளனர். பெருமளவானவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலால் மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தள பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் மட்டும் 30 பில்லியன் டொலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி) உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை 57.5 பில்லியன் டொலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 30 பில்லியன் டொலர்கள் அதிகரித்து 87.5 பில்லியன் டொலராக உள்ளது. மக்கள் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வரும் இந்த சூழலில் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகின்றது.
ஜூம் செயலிக்கு போட்டியாக, 50 பேர் வரை வீடியோ அழைப்பில் உரையாடும் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வரும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துபவர்களும், பேஸ்புக் கணக்கு இல்லாமல் கூட இந்த வீடியோ காலில் இணைந்து கொள்ளலாம். ஆனால் இந்த அழைப்பை தொடங்குபவர் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். பேஸ்புக்கின் நிர்வாகி மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதால் அவர் உலகின் 3வது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதல் இடத்தில் அமேசான் சி.இ.ஒ ஜெஃப் பேசோஸ் மற்றும் 2வது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளார்.