நீண்ட கால இழுபறிக்கு பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியது..!!!
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2016 ஆம் ஆண்டு பிரித்தானியா நிரந்தரமாக விலக முடிவெடுத்தது.இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பிரெக்ஸிட் அவ்வளவு எளிதாக அமையவில்லை. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நிரந்தரமாக விலக வேண்டும் என பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதற்கு பின்னர் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் பல பிரச்சினைகள் ற்பட அங்கு அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்தன. டேவிட் கேமரன், தெரசா மே உள்ளிட்டோர் பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. அதன் பின்பு தீவிர வலது சாரியான போரிஸ் ஜான்சன் பிரதமரானார். பிரெக்ஸிட்டை நிறைவேற்றியே தீருவேன் என்ற தனது வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். ஆனால் தொடக்கத்தில் அவருக்கும் அது சாத்தியப்படவில்லை. பிரெக்ஸிட் உடன்படிகை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லாததால் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்குச் சென்றார்.
தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அதிக வெற்றி பெற்றார். அதன் பின்னர் மேலும் காலம் நீடிக்காமல் உடனடியாக பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்து அனுமதியைப் பெற்றார். பாராளுமன்றத்தின் இரு அவையிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக வரவேற்க்கப்பட்டு நிறைவேறியது. பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்ற பின்னர், பிரெக்சிட்டுக்கு பிரித்தானிய ராணி 2ம் எலிஸபெத்தும் தனது ஒப்புதலை வழங்கினார். இந்த நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பொது வாக்கெடுப்புக்கு முன்னர் பிரித்தானியா எடுத்த இந்த திடீர் முடிவின் மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 பேரும், எதிராக 49 பேரும் வாக்களித்தனர். இதன் விளைவாக நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் பிரித்தானியா நேற்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி விலகியது. பிரித்தானியாவின் நேரப்படி நேற்றைய தினம் இரவு 11 மணிக்கு விலகியிருக்கிறது. அத்துடன் பிரெக்ஸிட்டும் முடிவுக்கு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம்…
ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். 28 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகம் , மக்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பணிக்கு செல்வது, தங்கு தடையின்றி குடியேறுவது போன்ற சுதந்திரம் உள்ளது. 1973 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த பிரிட்டன் 2020 ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து வெளியேற வேண்டும்.
பிரெக்ஸிட் நிறைவேறிய பின்னர் என்ன நடக்கும்…
பிரித்தானியா, தனிநாடாக பிரிந்தாலும் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்த 11 மாதங்கள் கொடுக்கப்படும். அதாவது எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ள 73 பிரித்தானிய எம்பிக்கள் தங்கள் பதவியை இழப்பர். அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்புகள் அனைத்தில் இருந்தும் பிரித்தானியா வெளியேறி விடும். வழக்கமாக இடம்பெறும் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கு கொல்லமாட்டார். வர்த்தக உறவு தொடர்பாக மற்ற நாடுகளுடன் பிரித்தானியா அரசு சுதந்திரமான பேச்சு வார்த்தையை முன்னெடுக்கும் பிரித்தானியா கடவுசீட்டுகள் மீண்டும் நீல நிறத்திலேயே விநியோகிக்கப்படும்.
பிரெக்ஸிட்டை கொண்டாடும் வகையில் ஜனவரி 31 ஆம் திகதி என பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும். பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படும். பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவிலோ வசிப்பதிலோ அல்லது பணியாற்றுவதிலோ எந்தவொரு தடையும் இருக்காது. தனிநாடாக பிரித்தானியா தனது புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ளது. பிரித்தானியா வெளியேறுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 27ஆக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.