சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஆரம்பம்!
உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் தொற்றை குறி வைத்து நடத்தப்படும் அரசியலால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையில் மீண்டும் ஒரு மோதல் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அழிக்கும் நோக்கில் கொரோனா வைரஸை உருவாக்கிவிட்டதாக சீனா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, அமெரிக்கா மீது கடும் விமர்சனங்களை தெரிவித்தார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் அடுத்த நாடு மீது பழி சுமத்துவதன் மூலம் ஒரு நாடு தனது மதிப்பை தானே இழந்து விடுகிறது என கூறியுள்ளார்.
மேலும் இது போன்ற பழி சுமத்தும் நடவடிக்கைகள் கொரோனா பிரச்சினைக்கு தீர்வைத் தராது என்றும், மற்ற நாட்டின் உணர்வைத்தான் புண்படுத்தும் என்றும் வாங்க் யி கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு தங்கள் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலம் வாய்ந்ததாக எழுச்சி பெறும் என்றும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி கூறியுள்ளார். சீனாவின் முன்னேற்றத்தை எந்த நாட்டாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் வாங்க் யி தெரிவித்தார்.