பிலிப்பைன்சில் மீண்டும் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!!!
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியிலுள்ள மிண்டானாவ் தீவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலையில் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியிலுள்ள மிண்டானாவ் தீவை மையமாக கொண்டு கடந்த 29 ஆம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் சேதமடைந்ததோடு இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது போன்ற நிலையில் மிண்டானாவ் தீவில் இன்று காலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவில் பதிவானதோடு 45 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அதேபோல் பள்ளியிலிருந்த மாணவர்கள், மால், அலுவலக கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்ததோடு தேவோ நகரில் உள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது.
மீட்பு படையினர் விரைந்து சென்று இடிந்து விழுந்த கட்டிடங்களில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதையடுத்து கடந்த 2 வாரங்களில் மிண்டானாவை மையமாக கொண்டு 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக இன்னும் முழுமையான விபரம் எதுவும் வெளியாகவில்லை.