சீனாவில் நான்கு பிரித்தானியர்கள் கைது…!!!
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் காரணமாக 4 பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரித்தானியர்களின் நிலை குறித்து எந்தவொரு தகவலும் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் 16 வெளிநாட்டினர் உட்பட 19 பேரைக் கைதுசெய்ததாக சுசோ நகர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சந்தேகநபர்கள் எவரையும் இது வரைக்கும் பொலிஸார் அடையாளம் காணவில்லை. எனினும் வெளிநாட்டவர்களில் ஏழு பேர் ஒரு கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்றும் ஒன்பது பேர் மாணவர்கள் என்றும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சுவிஸ் நிறுவனமான எடியூகேஷன் ஃ பெர்ஸ்ட் (Education First) என்ற ஆங்கில மையத்தில் பணிபுரிந்ததாக சீன அரச வானொலி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நபர்களை கைது செய்த நடவடிக்கை தொடர்பாக குறித்த கல்வி நிறுவனம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் போது 4 பிரித்தானியர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. சீனாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரணதண்டனை உட்பட மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.