பெற்ற மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை..!!
காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடமங்கலத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஆறுமுகம் என்பவர் கூலி தொழிலாளி இவர் சாமியாடியாகவும் இருந்தார். இவருக்கு 32 வயதுடைய கோவிந்தம்மாள் என்ற மனைவியும் 12 வயதுடைய ராஜேஸ்வரி, 10 வயதுடைய ஷாலினி மற்றும் 8 வயதுடைய சேதுராமன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளன. நேற்றைய தினம் காலை, கோவிந்தம்மாளுக்கும், ஆறுமுகத்திற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கோவிந்தம்மாள், பிள்ளைகளை கணவரிடம் விட்டு தனியார் தொழிற்சாலைக்கு துப்புரவு பணிக்கு சென்றுவிட்டார்.
பணி முடித்து மாலை வீட்டிற்கு திரும்பிய போது, மூத்த மகள் ராஜேஸ்வரி மயங்கி கிடந்தார். மகளை எழுப்ப முயற்சித்த போது உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கணவர் மற்றும் இரு குழந்தைகள் வீட்டில் இல்லாததால் கவலை அடைந்த கோவிந்தம்மாள் அருகாமை வீட்டாருடன், அவர்களை தேடிய நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில், வடமங்கலம் பகுதியில் விவசாய கிணற்றின் அருகே உள்ள மரத்தில் ஆறுமுகம் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழந்தைகளை காணாததால், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் ஷாலினி மற்றும் சேதுராமன் உடல்களை மீட்டபோது, இருவரும் ஒரே கல்லில் கயிறால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து மீட்டனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில், ஆறுமுகம், கூலி வேலை செய்தது மட்டுமின்றி, சாமியாடி குறி சொல்பவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை, தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கோவிந்தம்மாள் வீட்டில் இருந்து வெளியேறி வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், மனைவி கோபித்து தன்னை விட்டு எங்கோ சென்று விட்டார் என நினைத்து குழந்தைகளை கொலை செய்து ஆறுமுகம் தற்கொலை செய்திருக்கலாம்.அல்லது, சாமியாடி என்பதால், குழந்தைகளை நரபலி கொடுத்தாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறோம். என தெரிவித்துள்ளனர்.