ஏலியன்கள் பூமியில் வாழ்கின்றனவா? வெளியான தகவல்!
“எமது கண்களுக்குத் தெரியாமல் ஏலியன்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்க சந்தர்ப்பம் உள்ளது” என பிரிட்டன் விண்வெளி வீராங்கனை ஒருவர் தெரிவித்துள்ளார்.
பூமியை மனிதன் என்னதான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றாலும், அது எப்போதுமே நடக்காத காரியம்தான். அதற்கு உதாரணங்கள் பல உண்டு, அவற்றில் பூகம்பம், காட்டுத்தீ, சுனாமி என இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேபோல, இயற்கையால் மாத்திரமின்றி மனிதனை விட திறனுடைய பல விடயங்கள் எமது கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அதிலும், வானில் பறந்து திரிகிறது எனக் கூறப்படும் பறக்கும் தட்டுகள், ஏலியன்கள், வினோதமான உருவங்கள் போன்ற சில விந்தைகள் குறித்து இன்று வரை முடிவுக்கு வர முடியவில்லை. இவை பூமியில் தென்படுகின்றன என அவ்வப்போது கூறப்பட்டாலும் அவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் சரியாக இல்லை.
இந்நிலையில், பூமியில் ஏலியன்கள் வாழ்ந்துகொண்டுதான் உள்ளன. ஆனால், அவை எமது கண்களுக்குத் தெரிவதில்லை என பிரிட்டனைச் சேர்ந்த, முதலாவது விண்வெளி வீராங்கனையான டொக்டர் ஹெலன் ஷார்மன் (வயது 56) தெரிவித்துள்ளார்.
‘விண்ணிலிருந்து பூமியைப் பார்ப்பதை விட அழகான விஷயம் எதுவும் இல்லை. பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன, அவைகளில் வெவ்வேறு விதமான வாழ்க்கை வடிவங்கள் இருக்க முடியும். பூமியில் உள்ள வாழ்க்கை முறை போன்று அங்கு இருக்காது. அந்த வேறுபாடுகள் ஏலியன்களை நம் கண்களுக்குப் புலப்படாத வகையில் மாற்றக்கூடும்.
ஏலியன்கள் தற்போது இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஏலியன்கள் மனிதர்களைப் போன்று கார்பன் மற்றும் நைட்ரஜனால் உருவாக்கப்படாவிட்டாலும், அவர்கள் இப்போதே இங்கே இருக்கக்கூடும், அவர்களை நம்மால் பார்க்க முடியாது’ என்று கூறினார்.