சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் அனைத்து திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்..!
சிங்கப்பூரிலுள்ள அனைத்து பள்ளிகள், ஒரு வார மார்ச் பள்ளி விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை முறியடிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆரம்பமாக, மார்ச் பள்ளி விடுமுறையின்போது வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு 14 நாள்கள் கட்டாய விடுப்பு வழங்கப்படும்.
மாணவர்கள், பள்ளி அதிகாரிகள், பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தோருக்கு அது பொருந்தும். அவர்கள் எப்போது சிங்கப்பூருக்குத் திரும்பினார்களோ அந்த நாளிலிருந்து 14 நாள்களுக்குக் கட்டாய விடுப்பு தொடங்கும். நாளைய தினத்தில் இருந்து அந்த உத்தரவு நடப்புக்கு வரும். பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் வீட்டிலிருந்தே பயில ஆதரவு வழங்கப்படும். இணைப்பாட நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்படும். சிங்கப்பூர் இளையர் கலை விழாவும் தள்ளி வைக்கப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் நிலை பற்றித் தெரிந்து கொள்ளப் பள்ளிகளை அணுகுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.