சிங்கப்பூரிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயங்களின் அனைத்து பிரார்த்தனை கூட்டங்களும் இன்றிலிருந்து தற்காலிகமாக இரத்து..!
சிங்கப்பூரிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயங்களின் அனைத்து பிரார்த்தனை கூட்டங்களும் இன்றிலிருந்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. நேற்றைய தினம் பிற்பகலிலிருந்து பிரார்த்தனைக் கூட்டங்கள் கால வரம்பின்றி நிறுத்தப்படுவதாக தலைமைப் பேராயர் வில்லியம் கோ அறிவித்துள்ளார். உடல் வெப்பம் அவ்வப்போது சோதிக்கப்பட்டாலும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க பிரார்த்தனைக் கூட்டங்களை நிறுத்துவது பல வழிகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டார். அதிகளவில் மக்கள் ஒன்று கூடும் சமய முகாம்கள், கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளையும் இரத்து செய்யும்படி பேராயர் வில்லியம் தெரிவித்தார்.
அதற்கு இடையில், இன்றைக்கும் நாளைக்குமான கூட்டங்கள் வழக்கம் போல இடம்பெறும் என்று செயிண்ட் ஆண்ட்ரூஸ் (St Andrew’s) எனும் ஆங்கிலிக்கன் தேவாலயம் தெரிவித்துள்ளது. ஆலயத்திற்கு வருவோரின் விவரங்கள் குறித்து வைக்கப்படும் என்றும் உடல்வெப்பப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அது சொன்னது.