இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் எப்போதும் மனநல ஆலோசகர் இருக்க வேண்டும் – டோனி கருத்து
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் எப்போதும் மனநல ஆலோசகர் இருக்க வேண்டும் என்று டோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த எஸ்.பத்ரிநாத் தனது நண்பருடன் இணைந்து விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை சமாளித்து சாதிக்க உதவுவதற்காக “எம்போர” என்ற அமைப்பை ஏற்பத்தியுள்ளார். குறித்த அமைப்பு சார்பில் விளையாட்டு வீரர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில், டோனி பேசியுள்ளார்.
அதில்,
இந்தியாவை பொறுத்த வரைக்கும் மனநலம் சார்ந்த சில பலவீனங்கள் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது இன்றும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆனால் பொதுவாக நாம் அதனை மனநோய் என்று தெரிவிக்கின்றோம். துடுப்பாட்டத்தின் போது முதல் 5-10 பந்துகளை எதிர்கொள்ளும் போது எனது இதயத்துடிப்பு எகிறும். அப்போது எனக்கு நெருக்கடியும், லேசான பயமும் ஏற்படும். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இது போல் இருக்க தான் செய்யும். ஆனால் இந்த உண்மையை யாரும் சொல்வதில்லை. அதனை எப்படி சமாளிப்பது என்று எல்லோரும் யோசிப்பது உண்டு.
இது ஒரு சிறிய பிரச்சினை தான். ஆனால் பல சமயங்களில் இதனை பயிற்சியாளரிடம் சொல்ல நாம் தயக்கம் காட்டுவோம். இதனை சமாளிக்க மனநல ஆலோசகர் வேண்டும். மனநல ஆலோசகர் என்பவர் 10, 15 நாட்கள் மட்டும் அணியுடன் இருப்பவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவரால் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். மனநல ஆலோசகர் எப்போதும் அணியுடன் நிலையாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். என்று அவர் தெரிவித்துள்ளார்.