தடைப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கு பிசிசிஐ ஒரு வழியை கையில் எடுத்துள்ளது!
கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தொடங்க வேண்டிய இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டு பின்னர் மே 2 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கொடிய கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்த இந்த வருடம் ஐபிஎல் தொடர் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த வழிவகை செய்து கொடுக்கிறோம் என்று கேட்டிருந்தது. அதனை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை. அதை தாண்டி துபாய் கிரிக்கெட் வாரியம் துபாயில் ஐபிஎல் தொடரை நடத்த கேட்டிருந்தது. முன்னதாக 2009 ஆம் ஆண்டு அந்த நாட்டில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. குறித்த ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் பிசிசிஐக்கு கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். இதனால் எப்படியாவது இந்த தொடரை நடத்தி விட வேண்டும் என்று பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது.
மேலும் இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஐபிஎல் தொடரை நடத்த அனைத்து விதமான சாதகமான வாய்ப்புகளை பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. அது இந்தியாவில் நடத்தப்பட்டாலும் சரி வெளிநாட்டில் நடத்தப்பட்டாலும் சரி இரண்டிற்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் நடத்தப்படுவது தான் தேர்வாக இருக்கும் என்று கருதுகிறோம். முன்னரே அதற்கு முன்னர் இரண்டு முறை வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தியிருக்கிறோம். மேலும், உலக கோப்பை தொடர் தொடர்பாக ஐசிசி இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் குறித்து எந்த அறிவிப்பும் வராது என்று தெரிவித்துள்ளார்.