ஊரடங்கு சட்டத்தை மீறி சாவகச்சேரியில் நடமாடிய 20 பேர் கைது..!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரப் பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 20 பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இன்றைய தினம் (28) திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளவிருந்த மணமகன் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற திருமணம் ஒன்றுக்கு சென்று வந்து கொண்டிருந்த மணமக்களின் உறவினர்களும் அவர்கள் பயணித்த வாகனத்தோடு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மணமகன் தனது திருமண அழைப்பிதழை காண்பித்ததன் அடிப்படையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் கைது செய்யப்பட்ட ஏனையவர்களும் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.