உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 65, 000 ஆக அதிகரிப்பு..!!
உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 65, 000 ஆக அதிகரித்துள்ளதுடன் 12 லட்சத்து 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே புரட்டி எடுக்கும் கொரோனா தொற்று நோய்க்கு இன்றைய தினம் மேலும் 900 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 470 பேர் உயிரிழந்துள்ளனர். அதையடுத்து பெல்ஜியம் நாட்டில் 164 பேரும், ஈரானில் 150 பேரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் 19 பேரும், ஆஸ்திரியாவில் 18 பேரும் பலியாகியுள்ளனர். சீனாவில் 3 பேரும், அமெரிக்காவில் 2 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் உள்பட இன்றைய தினம் உயிரிழந்த 900 பேரையும் சேர்த்து, உலகில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பேர் இறந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் ஸ்பெயின் 2ம் இடத்திலும், அமெரிக்கா 3ம் இடத்திலும் உள்ளன.
இதேபோல் உலகில் மேலும் புதிதாக 11 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகபட்சமாக ஸ்பெயினில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கும், ஈரானில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோருக்கும், உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மருத்துவ சிகிச்சையில் 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் குணமான நிலையில், 8 லட்சத்து 95 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 44 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.