உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது..!!
உலக நாடுகளை புரட்டி எடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளது. பிரித்தானியாவில் ஒரே நாளில் 938 பேரும், ஸ்பெயினில் 747 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் கொத்து, கொத்தாக மரணங்களை எதிர்கொண்ட சீனாவில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொடுத்த நிலையில், அதிலிருந்து, விடுபட்டு, தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. எனினும், சீனாவிலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக, கொரோனா பாதிப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அண்மைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 15 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 88 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் 3 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இத்தாலியில் உயிரிழப்பு 17 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில், கொரோனாவால் 542 பேர் உயிரிழந்துள்ளனர். பன்னாட்டளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இத்தாலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இத்தாலிக்கு அடுத்த படியாக, அதிகளவில், கொரோனா மரணங்களை எதிர்கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின் ஆகும். ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 747 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு 14,792 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,48,220 ஆக அதிகரித்துள்ளது. வல்லரசு நாடுகளின் முதன்மையானதாக தன்னை முன்னிறுத்தும் அமெரிக்கா, கட்டுக்கடங்காது கொரோனா தொற்றால் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 14 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
பிரான்ஸ் தேசம் கொரோனாவால் 10,869 பேரை பலி கொடுத்துள்ளது. அந்நாட்டில் 1,12,950 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டில், கொரோனாவால் 60,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,097ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், இங்கிலாந்து நாட்டில், 938 பேர் கொரோனாவுக்கு காவு கொடுக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக, பெல்ஜியத்தில், இன்று, ஒரே நாளில் 205 பேர் கொரோனாவால் காவு கொடுக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,240ஆக உயர்ந்துள்ளது. 23,403 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ தொடங்கிய சிங்கப்பூர், தாய்லாந்து, கத்தார், சவுதி அரேபியா, துபாயை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்பிரிக்கா, சிலி, கொலம்பியா போன்ற நாடுகளில், புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அந்த தொற்றுநோய் முழு அளவில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதை, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.