வட கொரியாவின் அணு ஆயுத வலிமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி கிம் ஜாங் உன்!
வட கொரியாவில் அணு ஆயுத வலிமையை அதிகரிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வட கொரியவின் தலைநகர் பியாங்யாங்கில் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி கிம் ஜாங் உன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சு நின்று போன நிலையில், அணு ஆயுத வலிமையை அதிகரிக்கும் கொள்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிற நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் படை வலிமையையும் ஆயுதங்களையும் பெருக்கிக் கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக ஜனாதிபதி கிம்மின் உடல் நலம் பற்றிப் பல்வேறு செய்திகள் வந்த நிலையில் அவர் முதன் முறையாக ஓர் அலுவல் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.