இந்தோனேசியாவில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி…!!!
இந்தோனேசியாவில் சுமாத்ரா மற்றும் கலிமந்தான் போன்ற இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, கூடுதல் வளங்களைப் பயன்படுத்த உள்ளதாக இந்தோனேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசியல், சட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விரான்டோ இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்துள்ளார். காட்டுத் தீ பற்றி எரியும் இடங்களில் மழையை ஏற்படுத்த கூடிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
காற்றின் தரம் மாசடைந்ததால் சில நேரங்களில் 300 மீட்டர் வரை மட்டுமே பார்க்க முடிகிறது. அதன் காரணமாக சுமாத்ரா தீவில் விமான நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது. பல விமானச் சேவை நிறுவனங்கள் மற்றும் விமானச் சேவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரியாவ் மற்றும் ஜாம்பி மாநிலங்களில், காற்றின் தரம், அபாயகரமான அளவில் காணப்படுகின்றது. இது போன்ற காரணங்களால் அங்கு பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.