உக்ரைன் விமானம் ஈரானாலே சுடப்பட்டது: அமெரிக்கா – கனடாவின் குற்றச்சாட்டை மறுக்கிறது ஈரான்!
உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, அது ஈரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
ஈரானிலிருந்து, உக்ரைனுக்குப் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே வீழ்ந்து நொறுங்கியது.
இந்நிலையில், உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அதேபோல், அமெரிக்காவும் இதே கருத்தையே தெரிவித்துள்ளது. அதாவது, ஈரான், எதிர்பாராத விதமாக விமானத்தைச் சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என்று அமெரிக்கா அதிகாரிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், கனடா மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.
குறித்த விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் பல, அதே வான்பரப்பால் பறந்து சென்றுள்ளன. கனடா தன்னிடம் உள்ள உளவுத்தகவல்களை வழங்கி விமான விபத்துக் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எனக் குற்றச்சாட்டப்படுவது அனைத்துமே ஈரானுக்கு எதிரான உளவியல் போர் மாத்திரமே. விபத்தில் இறந்த பயணிகள் சார்பாக நாடுகள், தங்கள் பிரதிநிதிகளை ஈரானுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல, கறுப்புப் பெட்டி தொடர்பான விசாரணையில் இணைந்து பணியாற்ற, அமெரிக்காவின் போயிங் நிறுவனமும் அதன் பிரதிநிதியை அனுப்பவேண்டும் எனவும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.