ரஜினியை கமல் அரசியலுக்கு இழுப்பதன் பின்னணி என்ன?
“தமிழகத்தின் தற்போதைய நிலையில் ரஜினிகாந்த அரசியல் களத்துக்கு வருவாரானால் நன்றாக இருக்கும். அவர் தமிழகத்துக்கு நல்லதைச் செய்யக்கூடியவர்” என நடிகரும் அரசியல்வாதியுமான கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், இவ்வாறு தெரிவித்துள்ளமை ரஜினி – கமல் கூட்டணி குறித்த முன்னாயத்தம் எனப் பார்க்கப்படுகிறது.
தி.மு.க. நடத்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்ததையடுத்து அவர் தி.மு.கவுடன் கூட்டணி சேரப் போகிறார் என பரபரப்பாகப் பேசப்பட்டது. எனினும் அவரது கட்சி அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளவில்லை. இதையடுத்து தி.மு.கவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், ரஜினி – கமல் கூட்டணி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி மீது காவி சாயம் பூசப்படுவது குறித்து ரஜினி பேட்டியளித்திருந்தார். அதற்குக் கமலின் ஆலோசனைதான் காரணம் எனவும், தி.மு.க. போராட்டத்தில் கமல் பங்கேற்காமைக்கு ரஜினியின் ஆலோசனைதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கமல் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியவை வருமாறு-
“ரஜினிகாந்த் தமிழராகவே மாறிவிட்டார். அவர் தமிழ்நாட்டுக்காகப் பணிபுரிய வேண்டும். அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்.
தற்போது தமிழ்நாடு ஊழல் கூடிய மாநிலமாக மாறியுள்ளது. எனவே தலைமையில் மாற்றம் வரவேண்டும். அது நடக்காமல் ஊழல் மாற வாய்ப்பு இல்லை. திராவிட அரசியல் சரியான திசையை நோக்கிப் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்றார்.