குரும்பைகள் என அழைக்கப்பட்ட புலிகளின் குட்டி விமானங்கள்!
புலிகளின் விமானத்தாக்குதல்கள் மற்றும் அவற்றை எதிர்கொண்ட இலங்கைப் படையினரின் அர்ப்பணிப்புகள் குறித்து இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சீனத்துறைமுகத்தில் நடைபெற்ற விமானப் படையினர் சம்பந்தமான நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு-
இலங்கை விமானப்படையே தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய அனுபவங்களை அதிகமாகப் பெற்ற படையாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அதேவேளை, எந்தவொரு தீவிரவாத அமைப்பும் விமானப்படையை வைத்திருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் மாத்திரமே விமானப்படையை வைத்திருந்தனர். அதற்கான திறன் அவர்களிடம் இருந்தது. அவர்களின் விமானப் படைத் தாக்குதல்களால் உலகத்திலுள்ள தீவிரவாத அமைப்புகளும் புது அனுபவத்தைப் பெற்றன.
இரவில் சத்தமின்றி பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள். அப்போதைய தாக்குதல் விமானங்களுக்கு எமது மக்கள் குரும்பை எனப் பெயர் வைத்திருந்தார்கள்.
விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்களை நடத்தியபோது, முழு உலகமுமே அவர்கள் பக்கம் பார்வையைத் திருப்பின. அவர்களின் சிறிய விமானங்களின் இயந்திரம் உட்பட்ட பாகங்களை எமது படைகளின் ஏவுகணைகளில் சிக்காதவண்ணம் அமைக்கப்பட்டிருந்தன என அறியமுடிகின்றது.
இத்தகைய தொழில்நுட்பங்களை சர்வதேசம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை. இவ்வாறு பல தொழில்நுட்பங்களை புலிகளே அறிமுகப்படுத்தினர்” என்றார்.
அதேவேளை, விமானப்படையினரின அளப்பரிய சேவைகள் மற்றும் அர்ப்பணிப்புகள் குறித்தும் பாராட்டினார்.