நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இடை நிறுத்தம்..!!
இன்றைய தினம் வெலிங்டனில் நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். நியுசிலாந்து அணியின் துல்லிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். சவுதி பந்துவீச்சில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த அனுபவ வீரர் புஜாரா, கேப்டன் விராட் கோலி ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து நிலை தடுமாறிய இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க, தொடக்க வீரர் மயங்க் அகர்வாலுடன், துணை கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த இந்த ஜோடியை ட்ரெண்ட் போல்ட் பிரித்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஹனுமா விஹாரி, 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் ரஹானேவுடன், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து மேலும் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். எனினும், அப்போது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களுடன் விளையாடி வருகிறது.