சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி..!
சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அரசு சார்பில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைப்பகுதியில் சீனாவின் ஹவுன் நகரில் கண்டறியப்பட்ட கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் தலை இடியாக மாறியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 59,141 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் Zhongnanhai என்ற இடத்தில் நடந்த மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் சீன ஜனாதிபதி ஷிஜிங்க்பிங் பங்கேற்றார். அப்போது அந்நாட்டு கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு எல்லா பெரிய நகரங்களிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சீனாவின் மருத்துவ பணியாளர்கள் 3000-க்கு அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும், அதில் 14 பேர் உயிரிழந்ததாகவும் சீன அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. அதில் சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகிற்கு தெரிவித்த மருத்துவர் லீ வென்லியாங்க் பெயரும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.