இந்தியாவில் கொரோனா வைரஸால் 414 பேர் உயிரிழப்பு..!!
நேற்றைய தினம் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 1,489 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகின்ற கொடிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக 12,380 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 414 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 1,489 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் 2,916 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 187 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 295 பேர் குணமடந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல் டெல்லியில் 1,578 பேரும் தமிழகத்தில் 1,242 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு இரண்டாம் கட்டமாக மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அதில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் என்றும் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு இடமளிக்காத வகையில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் மக்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக தெரியும் பட்சத்தில் மீண்டும் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மத வழிபாட்டுத்தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது என கூறியிருக்கும் மத்திய அரசு பொதுமக்கள் கூடும் விதமாக எந்தவொரு விழாக்களுக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.